Saturday, October 31, 2009

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"

3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு     சொல் "TYPEWRITER"

4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
 நீண்ட வார்த்தை 'Stewardesses"     

5. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான   "Tongue Twister"

7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
 12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.

10. உலகில் மனிதர்கள்  அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

11. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்குநன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம்., ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

12. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.



>

Thursday, October 29, 2009

தமிழக மீனவர்களும், அக்கறையில்லா அரசும்




இப்போதெல்லாம் அடிக்கடி தினசரிகளில் நமது மீனவர்கள் , இலங்கை கடற்ப்படையினரால் படும் தொல்லைகள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
அவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன, படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன,  பிடித்த மீன்களைக்கூட விடுவதில்லை. அவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன .(இன்றைய செய்தியில் கூட நேற்று கடலுக்குச்சென்ற மீன்பிடி படகை கடற்படை படகால் இடித்து சேதம் செய்துள்ளனர்)

இந்தியா இந்த பிராந்தியத்தில் பெரிய பலம வாய்ந்த நாடாக இருந்தும் தன் சொந்த குடிமக்களுக்கு கடலில் ஏற்படும் தொல்லைகளுக்கு எதிராக
எதுவும் செய்வதில்லை, ஆட்சியில் உள்ளவர்களும் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதே இல்லை.

மிகவும் பலம வாய்ந்த கடற்படை இருந்தும்., இலங்கை கடற்ப்படையினர் செய்யும்
அட்டூழியங்களிலிருந்து மீனவர்களை காப்பற்ற முடியவில்லை.
நம் கடற்ப்பகுதிக்கே வந்து மீனவர்களை துன்புறுத்தும் இவர்களை நம் கடற்ப்படை
தட்டிக்கேட்க வேண்டாமா? அவர்களை விரட்டி விட வேண்டாமா? இதை வேடிக்கை பார்க்கவா கடற்ப்படை வைத்திருக்கிறார்கள். இதைக்கூட செய்ய முடியாத கடற்ப்படை சுற்றுக்காவல் புரிந்து என்ன பயன்?
சின்னஞ்சிறு நாடான இலங்கையே விளையாட்டுக்காட்டும்போது .,சீனா, போன்ற பெரிய நாடுகள் வம்புக்கிழுத்தால்., இப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கப் போகிறோமா?
பாதுகாப்பில்லாத கடற்ப்படையினரால் தான் பாகிஸ்தான்காரன் கடல் வழி வந்து தாக்கினான்., இப்போது இலங்கைக்காரனும் கிட்டத்தட்ட தினமும் மீனவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறான்.

மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அரசின் கடமை.., இனியாவது தாமதம் செய்யாமல்
கடிதம், தந்தி, போராட்டம் என்று செல்லாமல் அட அட்லீஸ்ட் இலங்கைத்தூதுவரை கூப்பிட்டு கண்டனம் செய்தாலாவது இவர்கள் வால்த்தனம்
நிற்குமல்லவா? செய்வார்களா? 


>

Wednesday, October 28, 2009

முல்லைப்பெரியாறு புதிய அணை-கண்டன கூட்டமும் ஒத்திவைப்பு


சென்னை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையில், வரும் 1ம் தேதி மதுரையில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, மதுரையில், வரும் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் முதல்வர் கலந்து கொள்வார் எனவும், தி.மு.க., அறிவித்தது. பின்னர், அந்தக் கூட்டம், கேரளா அரசைக் கண்டித்து என மாற்றப்பட்டது. தற்போது, கூட்டமே ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.இது தொடர்பாக, தி.மு.க., தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, தமிழகம் காட்டும் எதிர்ப்பின் அடையாளமாக, வரும் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில், "தற்போதுள்ள அணை உறுதியாக இருக்கிறது; புதிய அணை கட்டத் தேவையில்லை' என, தமிழக அரசு வாதாடி வருகிறது.மத்திய அரசின் வக்கீலும் இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது எனக் கூறியிருப்பதையே தற்போதும் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் வரும் 1ம் தேதி நடத்துவதாகத் திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தை, ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-இன்றைய செய்தி (தின மலர்)
 எனது முந்தைய பதிவில் இந்த கண்டன கூட்டம் பற்றி குறிப்பிடிருந்தேன், இப்போது அந்த கூட்டத்தையே ஒத்திவைத்து  விட்டார்கள்.
'அரசியல்னா இதெல்லாம் சகஜம்க்ரிங்களா?' அதுவும் சரிதாங்க
என்னா நழுவல்.,
>

Monday, October 26, 2009

என் டைரியும் , யாரோ எழுதிய கவிதைகளும்

அன்புள்ள வலை அன்பர்களே!
இன்று எனக்கு விடுமுறை நாள்., எனது அறையில் உட்கார்ந்து என்
பழைய டைரியில் எனக்கு பிடித்த 90  களில் வெளிவந்த கவிதைகளை புரட்டிப்பார்த்தேன் ,இவை உங்களுக்கும் பிடிக்கும். அவற்றில் சில உங்களுக்காக:
1.

நேற்றைய வெற்றியின்
தழும்புகளைவிட இன்றைய போராட்டத்தின்
வியர்வைத்துளிகள்
நெற்றிக்கு கூடுதல் அலங்காரம்

வெல்ல வேண்டும் எப்போதும்
இந்த நல்ல எண்ணம் வேண்டும்
வெறியாக வேண்டாம் நெஞ்சில்
பொறியாக நிற்கட்டும்

உறைக்குள் உட்கார்ந்திருக்கும்  வரை
வாளுக்கு வருத்தமில்லை
உருவிய பின்னாலோ
தப்புவது நிச்சயமில்லை
வெட்டும்போதெல்லாம்
வாளின் மேனியும் காயம்பட்டே ஆகவேண்டியது
கட்டாயம் போலும்
கட்டுப்போட வழியின்றி
வழிகிறது இரத்தம்.
-பத்மாவதி தாயுமானவர்


2.உனக்கானசெய்தி ஒன்று

அடுக்கி விரித்து வைக்கப்பட்டிருக்கும்
அச்சடிக்கப்பட்ட அட்டைகளை கவனிக்கிறேன்
ஏதோ ஒன்று ஈர்க்க
எடுத்துப் பார்க்கும்
இரண்டாம் கணத்திலேயே சோர்வுறுகிறேன்

இன்னொன்று, வேறொன்று ,இன்னொன்று
என்னிடத்திருக்கும் உனக்கான செய்தியை
எதுவுமே முழுமையாய் வெளிப்படுத்தியிருக்கவில்லை

எப்படி முடியும்?
அவையெல்லாம் யார் யாரோ யார் யாருக்கோ
எது எதற்காகவோ உருவாக்கப்பட்டவை.

உனக்கான என் செய்தியை நானே
எழுதிவிடுவது என்று தீர்மானிக்கிறேன்
யோசிக்கிறேன்,யோசிக்கிறேன், போராடுகிறேன்
மொழியின் ஏழ்மையில் அயர்வுற்று வீழ்கிறேன்
எழுதப்படாத வெள்ளைத்தாளை உற்று நோக்குகிறேன்

நஸ்ரின்...
அதை உன்னால் வாசிக்கமுடியும்
இத்துடன் இணைத்துள்ளேன்.


3. வாய்ப்பு

ஒலி கூட்டி உச்சரிக்கையில்
கவனிக்காது நானிருந்தால் முகத்தில் அடிக்கும்
முறைத்தால்
சிறு இதழ் கொண்டு முத்தமிடும்

முடி பற்றி இழுத்து வீடெங்கும்
ஒரு குதிரைக்காரனைப்போல நடக்கும்
மறுத்துப்படுத்தால்
தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் ஊற்றும்

தெருவில் நடக்கிறேன் என
அடம் பிடிக்கும்
இறக்கி விட்டால் மண் கிளறும்.

அவளை நெருங்குகையில்
இடையில் வந்து படுத்து
உரத்துச் சிரிக்கும்

இப்படியாய்
எல்லோர்ருக்கும் போல
எனக்கும் வாய்த்திருக்கிறது
மகளின் குறும்புகள்

அனால், எவேருக்கேனும் நேருமோ
மழலையின் மோதிரத்தை
அடகுவைக்கும் வாழ்க்கை

-இரா.பச்சியப்பன்

4.
சற்று முன் அவள் நடந்துபோனாள்
தடயம் ஏதுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி , அனால்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
ஏன் இன்னும் அதிர்கிறது
என் இதயம்
-------------.
5. நினைக்கிறேன்.



மறக்க நினைக்கிறேன் ..
கள்ளிப்பாலில் மீசையும்
கரிக்கட்டையில் கிருதாவும் வரைந்து
சிரட்டையை மைக்காக தொங்கவிட்டு
வசனம் பேசி நாடகம் நடித்ததும்

களிமண் எடுத்து
குழல் ரேடியோ-ரிகார்ட்
செய்து
நூலை ஒயராக கட்டி
மரக்கிளை யிலிருந்து பாடியதும்

கடும் மழையிலும்
முறத்தை தலைக்கு வைத்துக்கொண்டு
பெட்டிக்ககடையில்
பட்டாணி வாங்கி கோறித்ததும்

மாலை நேரம்
பக்கத்து வீட்டு நண்பன்
படிக்க அழைத்து
நடுவிலிருக்கும் சிம்னி விளக்கில்
தாள் சுருட்டி புகை விட்டதும்

குளத்தின் மறுகரைக்குப்
புன்னைக்கோட்டை ஏறிந்து
நீச்சலடித்து எடுத்து வரும் போட்டியும்

மறக்க நினைக்கிறேன், முடியவில்லை.
>

Sunday, October 25, 2009

அதிகமாய் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களை., சாதனையில் விஞ்சிய சீன மாணவர்கள்

ஆமாங்க, அமெரிக்காவிற்கு அதிகமாய் படிக்க இந்தியா மாணவர்களை அனுப்புகிறது.,ஆனால் அறிவியல் மற்றும் இன்ஜினீரிங் படிப்பில் சீன மாணவர்கள் அதிகம் சாதிப்பதாக புள்ளிவிபரம் காண்பிக்கிறது.,கிழே இன்று வெளிவந்த செய்தியை படியுங்கள்., நமது நாட்டில் அப்போதிலிருந்தே மனப்பாடம் செய்து பரிட்சையில் அப்படியே கொட்டி எழுதி மார்க் வாங்கி படிக்கும் பழக்கத்தினால் ,வெளிநாடு செல்லும் மாணவர்கள் அவர்கள் சொந்த மாக யோசித்து எழுத சொல்லும் கட்டுரை மற்றும் ஆராய்ச்சியில் அதிக அனுபவமின்மையால்
சொதப்பி விடுவதால் தான் பின் தங்கி விடுகிறார்கள் என்பது என் சொந்த கருத்து., இனி வரும் காலங்களில் வெளிநாட்டினரும் வியக்கும் வண்ணம் நமது கல்வித்திட்டங்களை , மாற்றி அமைத்தால், இங்கு அமெரிக்க, சீன மாணவர்கள் கூட வந்து படிக்க வாய்ப்பிருக்கிறது.. எனினும்  தற்ப்போது கல்வித்துறையில் செய்து வரும் மாற்றங்களும் ,ஊக்குவிப்புகளும் பலன் தர சில,பல  ஆண்டுகள் ஆகும்   

இனி இன்றைய பத்திரிகை செய்தி கிழே:-


புதுடில்லி : அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க அதிக மாணவர்களை அனுப்புவதில் சீனாவை இந்தியா மிஞ்சி வருகிறது; ஆனால், அங்கு அறிவியல், இன்ஜினியரிங் உட்பட பல படிப்புகளில் சாதிப்பது என்னவோ சீனா தான்.

அமெரிக்காவில், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று இந்திய மாணவர்கள் விரும்புகின்றனர். அதற்கேற்ப, சமீப ஆண்டுகளில் அதிக அளவில் மாணவர்கள் சென்ற வண்ணம் உள்ளனர். இதிலும் இந்தியாவுக்கு சவாலாக இருப்பது சீனா தான்.பொறியியல், அறிவியல் இரண்டிலும் மேற்படிப்புக்கு அதிக மாணவர்கள் அமெரிக்காவுக்கு செல்வதில், இந்தியாவுக்கு சமமாக சீனா இருந்து வருகிறது. ஆனால், சமீப ஆண்டுகளில் இதிலும், சீனா மிஞ்சி வருகிறது என்ற தகவல் வெளியாகி உள் ளது.கடந்த சில ஆண்டுகளில், பொறியியல் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் தான். அதே சமயம், பொறியியல் படிப்புகளில் ஆராய்ச்சி செய்வதிலும், டாக்டர் பட்டம் பெறுவதிலும் சீன மாணவர்கள் தான் முன்னணியில் உள் ளனர் என்று தெரியவந்துள்ளது.

பொறியியல் மட்டுமின்றி, அறிவியல் படிப்புகளில் இந்தியாவை சீனா மிஞ்சி விட்டது. இந்தியாவை விட, இரண்டரை மடங்கு அதிகமாக சீன மாணவர்கள் அமெரிக்காவில் இந்த படிப்புகளில் படிக்கின்றனர். அறிவியல் ஆராய்ச்சிகளிலும் சீனர்கள் தான் முதலிடத்தில் உள்ளனர்.இந்திய அறிவியல், தொழில் நுட்ப முன்னேற்ற அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் இது தொடர்பாக பல தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன.அதில் கூறியிருப்பதாவது:அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க கடந்த 1998ல் இந்தியாவில் இருந்து 26 ஆயிரம் மாணவர்கள் சென்றனர்; அப்போது, அமெரிக்கா சென்ற சீன மாணவர்கள் எண்ணிக்கை 58 ஆயிரம்.

ஆனால், 2005ல், இரு நாடுகளும் சம அளவில் மாணவர்களை அனுப்பி வைப்பதில் போட்டி போட்டன.கடந்த 2007ல், அமெரிக்காவுக்கு சென்ற இந்திய மாணவர் கள் எண்ணிக்கை 85 ஆயிரம்; சீனாவில் இருந்து சென்ற மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரம். இந்த அளவுக்கு போட்டாபோட்டி வலுத்தது.கடந்த 1985 முதல் 2005 வரை, அமெரிக்காவில், பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற இந்திய மாணவர்கள் எண் ணிக்கை 8,100; அதே சமயம், சீன மாணவர்களில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் 12 ஆயிரம் பேர்.அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்ற இந்தியர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 800; சீன மாணவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரம்.

அதாவது, பொறியியல் மாணவர்களை அதிகம் அனுப்புவது இந்தியா தான்; ஆனால், தகுதி சார்ந்த பட்டங்கள் பெறுவதில் சீன மாணவர்கள் முதலிடம்; அதுபோல, அடிப்படை அறிவியலிலும் அதிகம் சாதிப்பது சீனர் கள்தான்.இதற்கு காரணம், அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கப்போகும் அளவுக்கு மாணவர்களை தகுதிப்பெறச் செய்வதில் இந்தியாவை விட, சீனா தான் அதிக கட்டமைப்பு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கல்வித் துறையில் தனியார் முதலீடு அதிகம் என்பதும் முக்கிய காரணம்.இது, இன்று நேற்றல்ல, 30 ஆண்டாகவே கல்வித்துறையில் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி வந்துள்ளது. அதனால், தகுதி வாய்ந்த படிப்புகளை முடித்த சீன மாணவர்கள், முழு தகுதியுடன் அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் செல்கின்றனர்; அவர்களால் ஆராய்ச்சிகளிலும் ஈடுபட முடிகிறது.

நானோ டெக்னாலஜி, பயாலஜி உட்பட பல அறிவியல் துறைகளில் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்கள் தான் தொ டர்ந்து சாதித்த வண்ணம் உள்ளனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா இப்போது தான் கல்வித்துறையில், அதிலும் அறிவியல் துறையில் முழு அக்கறை காட்டி, பல திட்டங்களை போட்டு, மாணவர்களை ஊக்கப் படுத்தி வருகிறது. புதிய ஐ.ஐ.டி.,க்கள் உருவாகி உள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இதன் பலன்கள் கிடைக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
>

Saturday, October 24, 2009

அடப்பாவிங்களா? இப்படியுமா வதந்தி கிளப்புவீர்கள்?

கோவை: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விபத்தில், எல்.கே.ஜி., குழந்தைகள் 30 பேர் இறந்து விட்டதாக, பரப்பப்பட்ட வதந்தியால், பொது மக்கள் பெரும் பீதிக்குள்ளாயினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மொபைல்போன் சந்தாதாரர் பலருக்கு, வந்த எஸ்.எம்.எஸ்.,சில், "கோவில்பட்டி பை-பாஸ் ரோட்டில் நடந்த விபத்தில், கே.ஆர்.பள்ளியைச் சேர்ந்த, 30 எல்.கே.ஜி., மாணவர்கள் இறந்து விட்டனர்; 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்; அவர்களுக்காக மன்றாடவும்' என, ஆங்கிலத்தில் தகவல் இருந்தது.


இந்த தகவலை உறுதிப்படுத்தாமலே பலர், தங்களது நண்பர்களுக்கு அனுப்பி, இரவு 8.00 முதல் 9.00 மணிக்குள், பல ஆயிரம் மொபைல் சந்தாதாரர்களை சென்றடைந்தது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பலர், அந்தப் பகுதியில் உள்ள தங்களது உறவினர் மற்றும் நண்பர்களிடம், இத்தகவலைப் பற்றி, விவரம் கேட்டனர். "டிவி'யிலும், இணைய தளங்களிலும், "பிளாஷ் நியூஸ்'லும் தகவல் வராத காரணத்தால், பத்திரிகை அலுவலகங்களை துளைத்தெடுக்க ஆரம்பித்தனர்.

போலீஸ் அதிகாரிகளும், அங்குள்ள போலீசாரை தொடர்பு கொண்டு விசாரித்தனர். நீண்ட நேர விசாரணைக்குப்பின், "அப்படி ஒரு விபத்து நடக்கவே இல்லை' என்று தெரியவந்தது; ஆனாலும், எஸ்.எம்.எஸ்., பரிமாற்றம் நின்றபாடில்லை. இப்படி ஒரு வதந்தி, எங்கிருந்து, எதற்காக கிளப்பி விடப்பட்டது என்று, மெசேஜ் அனுப்பிய நண்பர்களில் ஆரம்பித்து, ஒவ்வொருவராகப் பின் தொடர்ந்து பார்த்தபோது, பலருக்கு அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து, இந்த எஸ்.எம்.எஸ்., வந்திருப்பது தெரியவந்தது. மதப் பிரசாரம் செய்யும் ஓர் அமைப்பில் இருந்து, இந்த மெசேஜ் வந்ததாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள இந்த சபைக்கு, சென்று விவரம் கேட்டபோது, அவர்களுக்கும் வேறு எங்கிருந்தோ தகவல் வந்ததாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், எங்கிருந்து முதன் முதலாக இந்த, "மெசேஜ்' கிளம்பியது என்பதை, யாராலும் உறுதிப்படுத்த முடியவில்லை.

-தினமலர்(25-10-2009)

பின் குறிப்பு: இப்படியுமா வதந்தி கிளப்பிவிடுவார்கள்? மொபைல் போன் களுக்கு வரும் செய்திகளை நம்பி நம்மில் பலர் உண்மை என்றே நம்பி அதனை பலருக்கு
திருப்பி அனுப்புவது எவ்வளவு பெரிய தவறு என்று இந்த சம்பவம் தெளிவாக உணர்த்துகிறது., எனவே இனி வரும்  anonymous sms களின் உண்மை நிலை கண்டறியாமல் அதிகம் அலட்டிக்கொள்ள்வது-தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.
>

வேட்டையாடப்படும் "வேட்டைக்காரன்"


கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் , ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளா?

எம்.ஜி.ஆர். நடித்த வெற்றிப்படமான "வேட்டைக்காரன்' என்கிற தலைப்பால் ஈர்க்கப்பட்டோ அல்லது கற்பனை வறட்சியால் பீடிக்கப்பட்டோ அதே தலைப்பிலேயே தற்போது இன்னொரு படம் தயாராகியுள்ளது.
வேடிக்கை என்னவென்றால், எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் தலைப்பில் உருவான "அன்பே வா', "நாடோடி மன்னன்', "ரகசிய போலீஸ் 115', "நம் நாடு', "நாளை நமதே' உள்ளிட்ட எந்தத் திரைப்படமுமே இதுவரை வெற்றி பெற்றதில்லை. பரத் நடிப்பில் "எங்க வீட்டு பிள்ளை' என்ற தலைப்பில் தொடங்கப்பட்ட படமும் நின்றுவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட "ஆயிரத்தில் ஒருவன்' படம் இரண்டு வருடங்களாகியும் இன்னும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் புதிய "வேட்டைக்காரன்' படத்தை பாரம்பரியம் மிக்க ஏவி.எம். நிறுவனம் சார்பாக ஏவி.எம்.பாலசுப்ரமணியனும் பி.குருநாத்தும் தயாரிக்க, நடிகர் விஜய் நடித்திருக்கிறார்.
அவரோடு, தெலுங்கின் முன்னணி நடிகை அனுஷ்கா கை கோர்த்திருக்கிறார் கதாநாயகியாக! வியாபார ரீதியான இயக்குநர் தரணியின் உதவியாளர் பாபு சிவன் இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

ஆக, ஒரு கமர்ஷியல் திரைப்பட கூட்டணியின் பின்புலத்தோடு கடந்த ஆண்டு இறுதியில் "வேட்டைக்காரன்' வெற்றிக் கனவோடு பயணிக்கத் தொடங்கினான்.
கடந்த இரண்டு வருடங்களாக, அவ்வப்போது தனது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தி, மன்றத்துக்கென தனிக்கொடி, இயக்கம், இலச்சினை (ப்ர்ஞ்ர்) உருவாக்கி ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் விஜய்யின் இந்தப் பயணத்தை அரசியலில் வெற்றிக் கூட்டணி அமைத்து வருபவர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர்.
சுமார் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுவதாக எதிர்பாராத அறிவிப்பு வந்தது.

பொதுவாக, எந்த நிறுவனம் தயாரித்த படமாக இருந்தாலும் அதை தங்களது விளம்பர சக்தியைக் காட்டி மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே சன் பிக்சர்ஸின் வழக்கம் எனக் கூறப்படுவதுண்டு. அப்படிப்பட்ட படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பெறாவிட்டாலும் கூட சன் டி.வி.யின் "டாப் டென்' பட வரிசையில் முதலிடம் பெற்றுவிடும்.

படத்தைத் தயாரித்து வியாபாரம் செய்ய முடியாமலோ அல்லது பணம் குறைந்தால் கூட பரவாயில்லை; நல்ல விளம்பரம் கிடைக்கும்; அதை வைத்து அடுத்த படத்தில் காலூன்றிவிடலாம் என நினைப்போர் தங்களது படங்களை "சன்' வசம் தருவதாகவும் பேச்சு உண்டு.
விளம்பரங்களில் ஏவி.எம்.மின் "வேட்டைக்காரன்', இளைய தளபதியின் "வேட்டைக்காரன்' என்றெல்லாம் பயன்படுத்த முடியாது; சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் "வேட்டைக்காரன்' என்றுதான் வரும். அதனால் வேட்டைக்காரனாக இருந்துகொண்டு சன் பிக்சர்ஸ் கூண்டில் அடைபடுவதை விஜய் தரப்பும் தயாரிப்பு தரப்பும் ஆரம்பத்தில் விரும்பவில்லை என்றே அவர்களது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சன் பிக்சர்ஸ் வசம் படம் போய்விட்டால் தங்களுக்கு சென்னை ஏரியா விநியோக உரிமை கிடைக்காது என்பதும் விஜய் வட்டாரத்தில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. ஆனாலும் என்ன காரணத்தாலோ, வேறு வழியில்லாமல் வேட்டைக்காரனே வலையில் சிக்கிக்கொண்டான். படம் சன் பிக்சர்ஸ் வசம் மாறியது, விஜய் தரப்பே எதிர்பார்க்காத... குறிப்பாக, அறியாத ஒன்று எனவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சில நல விரும்பிகள் மூலம் தில்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டு வந்தார். உடனே காங்கிரஸில் சேரப் போகிறார்; இளைஞரணித் தலைவர் ஆகப்போகிறார் போன்ற ரீதியில் தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களை திடீரென அழைத்து "எனக்கு எல்லாமே சினிமாதான்; "வேட்டைக்காரன்' படம்தான் என் தற்போதைய இலக்கு. இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன்' என திடீரெனப் பின்வாங்கினார் நடிகர் விஜய்.

அவராகப் பின்வாங்கவில்லை; சில சக்திகளும் சூழ்நிலைகளும்தான் அவரை அப்படிப் பேசச் செய்தன என்று கூறியவர்களும் உண்டு.
விஜய்யும் அவரது குடும்பத்தினரும் எதிர்பார்த்தது போல, தில்லி காங்கிரஸ் வட்டாரங்களில் அவருக்கு வரவேற்பு இருக்கவில்லை என்று தெரிகிறது. தனது தந்தைக்கு மத்திய அமைச்சர் பதவி, தனக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி அல்லது தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பதவி, தனது ரசிகர் மன்றத்தினருக்கு வட்ட, மாவட்ட, மாநில அளவில் கட்சிப் பதவிகள் என்றெல்லாம் கனவுகள் கண்ட நடிகர் விஜய், காங்கிரஸ் மேலிடத்தின் "ஆகட்டும் பார்க்கலாம்' நமுட்டுச் சிரிப்பைப் பார்த்ததும் தகர்ந்தன. அதிகபட்சம் நடிகர் விஜய் மாநிலங்களவை உறுப்பினராக்கப் படலாம் என்பதுதான் காங்கிரஸ் தரப்பில் வாக்குறுதியாக இருந்ததாம்.

அது ஒரு புறம் இருக்க, "இளைய தளபதி'யின் அரசியல் ஆசையும், காங்கிரஸில் இணைந்து கட்சியை பலப்படுத்தும் முயற்சியும் ஆளும் திமுக தரப்பை எரிச்சலூட்டியதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?
அதையடுத்து உருவான அரசியல் திட்டமே "உறவாடிக் கெடு' ப்ராஜெக்ட். அதன் முன்னோட்டம்தான் "வேட்டைக்காரன்' படம் கைப்பற்றப்பட்டதன் பின்னணி என்கிறார்கள்.

தீபாவளிக்கு வர வேண்டிய படம் வெளிவரவில்லை. இதற்கு துணை முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த "ஆதவன்' படம்தான் காரணம். கலைஞர் தொலைக்காட்சி தொடங்கக் காரணமாக இருந்த காரணிகளைக் காலமும் பணமும் மாற்றிவிட்ட சூழ்நிலை நிலவுவதால் வேட்டைக்காரனும் ஆதவனும் ஓரிடத்துப் பிள்ளைகளாகிவிட்டனர். அதனால் தீபாவளிக்கு "ஆதவன்' அதன் பிறகு "வேட்டைக்காரன்' என முடிவு செய்யப்பட்டது.

விஜய்யின் முந்தைய பட வெளியீடுகளின்போது இருந்த அவருடைய தலையீடு முதல்முறையாகத் தகர்ந்தது. "வேட்டைக்காரன்' வெளிவராமல் தள்ளிப் போவதால், அடுத்த படத்தின் தயாரிப்பும், ரிலீசும் தள்ளிப் போகும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று "வேட்டைக்காரன்' தள்ளித் தள்ளிப் போகிறதே என்கிற கவலையில் "விஜய்' வட்டாரம் நிலைகுலைந்து போயிருக்கிறதே... சினிமாவைப் பொருத்தவரை ஆறிய கஞ்சி பழங்கஞ்சி தானுங்களே..!

சுட்டது: 'தினமணி' யிலிருந்துங்கோ(நன்றி)
>

இரண்டே நாளில் பெயர் மாற்றம்.,தி மு க பல்டிக்கு காரணம்-டெல்லி ரெய்டா?


22-10-2009(thu)      24-10-2009(sat)

எப்போதுமே யோசித்து
இறுதியான, உறுதியான முடிவெடுக்கும் தி மு க , இப்போவெல்லாம்
இப்படி இரண்டே நாளில் கண்டன கூட்டத்தை, புதிய  அணைக்கு எதிர்ப்பு என மாற்றிவிட்டது
முதலில், கடந்த  வியாழ்க்கிழமை அன்று 'மத்திய
இணை அமைச்சரை கண்டித்து மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம்' என்றும்\
இன்று,"முல்ல்லைப்பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு" என்றும் முரசொலி தி மு க விளம்பரம்.
என்னாச்சு? எதனால் இந்த தடுமாற்றம்? 
   



>

நடிகவேள் எம் ஆர் ராதா மறைந்த அன்று.


-எம்.ஜி.ஆரை ஏன் சுட்டேன்னா… கட்டை, கம்பு, கத்தி கிடைக்கலை. துப்பாக்கிதான் கிடைச்சது… அதான் சுட்டேன்!

-சிவாஜியா, அவனா… என் நாடகக் குழுவில்தான் இருந்தான்.
-கலைஞர்ன்னு பட்டம் வாங்கிக்கறான்…அவனவன் காசு கொடுத்து.
-நடிகர்கள் கடவுள் மாதிரி… ரசிகர்கள் கருவறைக்கு முன்னாடியே நின்னுடனும்.
-ஏண்டா, நடிகனைப் போய் தலைவாங்கிறே. உன் காசுலதானே அவனே பெரியாள் ஆயிருக்கான்.
- இந்த பேச்சுக்கு சொந்தக்காரர் 'நடிகவேள்' திரு எம் ஆர் ராதா அவர்கள் தான் மலேசிய நாட்டுக்கு சென்றிந்தபோது அவர் ஆற்றிய அந்த கேசட் அனேகமாக எல்லோரும் கேட்டிருப்பீர்கள்.
இப்படி சரளமாக, உறுதியாக, பயப்படாமல் மனதில் உள்ளதை அப்படியே பேசுபவர் , நடிப்பில் இவருக்கென்று தனி பாணி,  இவர் சினிமாவில் பேசும் வசனங்கள் மிரட்டும் தொணியிலும், சமயத்தில் நக்கலும் கேலியும் கலந்து பேசுவது  பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.

அந்தக்காலத்திலேயே வெளிநாட்டு சொகுசு கார் வாங்கி அதன் பின்னால் வைக்கோல் ஏற்றி சென்று சக நடிகர்களிடம் கடுப்பை உண்டாக்கியவர். 
இவர் அடிக்கடி சொல்லும்  'அடப்பாவிங்கடா' என்ற வசனம் இப்போதும் நடிகர் 'விவேக்' அடிக்கடி திரு எம் ஆர் ராதா  பாணியிலேயே சொல்லி சிரிப்பை வரவழைக்கிறார். 

நாள் 17-september-1979. இடம் திருச்சி
அன்று வழக்கம் போல காலையில் கல்லூரி  சென்ற எனக்கு அதிர்ச்சி., நடிகவேள் அவர்கள் அன்று காலையில் இறந்த செய்தி தான் காரணம். எனக்கு பிடித்த அந்தக்கால நடிகர், பேச்சாளர், பெரியார் தொண்டர் அவர் என்பதால் இயற்கையாகவே மிகவும் வருத்தமானேன். நானும் எனது நண்பர்களும் அருகிலுள்ள சங்கிளியாண்டவர்புரம் அவரது வீட்டுக்கு
சென்று இறுதி அஞ்சலி செலுத்த சென்றோம். கட்டுக்கிடங்கா கூட்டம். எல்லோரும் வருசை பிடித்து நின்று ஒவ்வொருவராக சென்று மரியாதை செய்து  வந்தோம்
அங்கே, திரு எம் ஆர் ஆர் வாசு , மற்றும் குடும்பத்தினர் அனைவரும் நின்றிந்தனர்.
வெளியே வரும் பொது, திரு ராதிகா அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளே சென்றார்(குறிப்பு: அப்போது தான் அவர் நடித்த முதல் படமான 'கிழக்கே போகும் ரயில்' வெளியாகி ஓடிக்கொண்டு  இருக்கிறது, அவர் அவ்வளவாக பாபுலராகாத நேரம் அது) அனால் அவரை இறுதி அஞ்சலி செலுத்த விடாமல் அங்கிருந்த திரு எம்  ஆர் ராதா அவர்களின்
குடும்ப உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி
தள்ளுமுள்ளு, வாக்குவாதம் நடந்துகொண்டு இருந்தது.
அப்புறம் நாங்களும் கல்லுரிக்கு திரும்பிவிட்டோம். அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
(இன்று திரு ராதிகா அவர்களும் அந்த கலைக்குடும்பத்தின் வாரிசாக திரைப்படத்திலும் சின்னத்திரையிலும் சாதனை செய்துகொண்டு இருக்கிறார் என்பது வேறு விஷயம்).
பின்னர் மாலையில் அவரின் இறுதி ஊர்வலத்தில் , தென்னிந்திய திரைப்பட சங்கத்தினர்கள், பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானோர்  கலந்துகொண்டனர்.

நடிகவேளின் மறைவு - திரையுலகத்துக்கு , ஏன் பொதுவாகவே தமிழ் பேசும் நல்லுலகுக்கு  ஒரு பேரிழப்பு என்றாலும் மிகையில்லை.
>

Friday, October 23, 2009

செஞ்சிலுவைச்சங்கம் 'திடீர்' பல்டி- வணங்காமண் நிவாரணப்பொருட்கள் சென்று சேர்வதில் தொடரும் சிக்கல்

'வணங்காமண்' நிவாரண பொருள்கள் சென்று சேர்வதில் தொடர்கிறது சிக்கல் : செஞ்சிலுவை சங்கம் 'திடீர்' பல்டி

(24-10-2009)




இலங்கைத் தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் வந்த நிவாரணப் பொருள்களை, கொழும்பு துறைமுகத்தில் இருந்து எடுத்த, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், அவற்றை மீண்டும் இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. இலங்கை அரசின் மூலமே அந்த நிவாரணப் பொருள்கள் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட நிவாரணப் பொருள்கள் ஐந்து மாத அலைகழிப்புக்குப் பிறகு, கடந்த 21ம் தேதியன்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பொருள்களை பெற்றுக் கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் அவற்றை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களிடம் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, நிவாரணப் பொருள்களை இலங்கை அரசிடம் ஒப்படைப்பதாகவும், இலங்கை அரசு மூலம் அவை தமிழர்களுக்கு வினியோகிக்கப்படும் என, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணத்தை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கவில்லை."வணங்காமண்' கப்பலில் ஏற்றிவரப்பட்ட மருந்து, உணவுப்பொருள், உடை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களுக்கு சென்று சேரவிடாமல் ஐந்து மாதங்களாக அலைகழித்த, இலங்கை அரசிடமே தற்போது இந்த பொருள்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்களை இலங்கை அரசு முறையாக வினியோகிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது குறித்து, "மனிதம்' தொண்டு நிறுவன செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐரோப்பிய மக்களால் கொடுக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் தமிழர்களை சென்று சேரக்கூடாது என்ற நோக்கில் இலங்கை அரசு செயல்பட்டது. இப்போது எந்த முறையான காரணமும் சொல்லாமல் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது. அவை முறையாக தமிழர்களை சென்று சேராது.நிவாரணப் பொருள்கள் வீணாகுமானால் அதற்கான பொறுப்பை இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே ஏற்க வேண்டும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கைத் தமிழர்களுக்கு சென்று சேர குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
>

தி மு க வின் மத்திய மந்திரிகள் ராஜினாமா ?

மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நவம்பர் 1ம் தேதி மதுரையில் மத்திய அமைச்சரவையைக் கண்டித்து திமுக நடத்தும் கூட்டத்தில் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மத்திய அரசுடனும், காங்கிரசுடனும் திமுகவுக்கு ஏற்பட்டு வரும் கருத்துவேறுபாடு மோதலாக உருவாகி வருவதால் இத்தகைய நிலைப்பாட்டை நிச்சயம் திமுக எடுக்கும் என்று தெரிய வருகிறது.

2009 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்புக் கிடைத்தது. பல்வேறு புதிய கட்சிகளின் ஆதரவும் வலிய வந்தது. இதனால் கடந்த 2004 முதல் 2009 வரையிலான மத்திய ஆட்சிக்காலத்தில் திமுகவுக்கு கிடைத்த மதிப்பும், மரியாதையும் இப்போது இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த மத்திய ஆட்சிக் காலத்தில் சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் மதித்து, அவரது மனம் கோணாமல் நடந்து கொண்டனர். மத்திய அரசு எந்தவொரு முக்கிய முடிவெடுத்தாலும் கருணாநிதியிடம் கலந்தாலோசித்தனர்.

அடிக்கடி மத்திய அமைச்சர்கள் சென்னைக்கு வந்து கோபாலபுரத்திலும், சிஐடி நகரிலும், அறிவாலயத்திலும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
சோனியாகாந்தியே மூன்று முறை தமிழகம் வந்து கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார். தவிரவும், மத்திய அமைச்சரவையிலும் இதுவரை இல்லாத அளவிற்கு மூன்று கேபினட் அமைச்சர்களும், 4 இணை அமைச்சர்களும் இடம்பெற காங்கிரஸ் வாய்ப்பளித்திருந்தது. அவர்கள் கேட்ட இலாக்காக்களும் தரப்பட்டன.

ஆனால், இம்முறை நிலைமை அப்படியில்லை. கடந்த முறை பேரன் தயாநிதி மாறனுக்கு எந்தவித ஆட்சேபமின்றி கேபினட் பொறுப்பு வாங்க முடிந்த கருணாநிதிக்கு இம்முறை தனது மகன் மு.க.அழகிரிக்கு கேபினட் பொறுப்பு வாங்க போராட வேண்டியிருந்ததாம்.
சேதுசமுத்திரத் திட்டம், செம்மொழி அந்தஸ்து, கேட்ட அளவுக்கு நிதி ஒதுக்கீடு என்று மத்திய அரசிடம் கடந்தமுறை எல்லாம் பெற்ற கருணாநிதியால் இம்முறை ஒரு துணை அமைச்சர் தந்த அனுமதியைக் கூட திரும்பப் பெற முடியவில்லை.

கடந்த காலத்தின் போது மத்திய அமைச்சரவையின் "ரிமோட்' கருணாநிதியின் கையில் என்று வீராப்புப் பேசி வந்த திமுகவினர் இன்றைய கையறு நிலை கண்டு கொதித்துப் போயுள்ளனராம்.
முல்லைப்பெரியாறு பிரச்சனையில் இரண்டு முறை பிரதமருக்கு கருணாநிதி கடிதங்கள் எழுதியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மகிவும் விவாதத்திற்குரிய பிரச்சனையாக இது மாறி, உச்சநீதிமன்றம் சென்று மத்திய அமைச்சரின் உத்தரவுக்கு தடை கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியும்,

ஒரு மாநில முதலமைச்சர், அதுவும் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சியின் தலைவர் மத்திய அரசை ஆளும் மாநிலம் எது? என்று கோபமாகக் கேள்வி எழுப்பியும் சோனியா காந்தியோ, பிரதமரோ சட்டை செய்யாமல் எதுவும் கருத்துக் கூறாமல் இருப்பது தமக்கு ஏற்பட்ட அவமானம், தமிழக அரசுக்கு ஏற்பட்ட அவமதிப்பு என்று கருணாநிதி கருதுகிறாராம். இதனால் மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை கலந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது தவிர, மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரான மு.க.அழகிரி மத்திய அமைச்சரவையில் நீடிக்க விருப்பம் இல்லை என்று கூறி வருகிறாராம். அவரை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்வதைவிட, ஒட்டு மொத்தமாக மத்திய மந்திரி சபையிலிருந்து திமுக வெளியேறி வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது என முடிவெடுக்கலாம் என்று திமுக வட்டாரத்திலேயே கூறுகின்றனர்.

இதற்கிடையே, முல்லை பெரியாறு பிரச்சனையில் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் எடுத்த முடிவை ஆட்சேபித்து, அவருக்கு எதிராகக் கண்டனக் கூட்டம் ஒன்றை மதுரையில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது.
நவம்பர் 1ம் தேதி நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியே பங்கேற்பார் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே மத்திய அரசை எந்த மாநிலம் ஆள்கிறது? என்று கேள்வி எழுப்பியதால் கருணாநிதி மீது கோபம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி, இந்தக் கண்டனக் கூட்ட அறிவிப்பால் மேலும் ஆத்திரம் அடைந்துள்ளதாம். அதன் எதிரொலி தான் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் துறை அலுவலகத்தில் சிபிஐ சோதனை என்றும் டெல்லி வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பரஸ்பரம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே விரிசல் உருவாவதற்கான அறிகுறி தென்பட்டு விட்டது.
மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்தால், இங்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் ஆபத்தில்லை என்ற நிலை இப்போது உருவாகி உள்ளது. இதுவரையிலும அதிமுக அணியில் இருந்த பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது அந்த அணியில் இல்லை.

மேலும் ஏற்கனவே திமுக அரசுக்கு இவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து கவர்னரிடம் வழங்கிய கடிதங்களை இவர்கள் யாரும் திரும்பப் பெறவில்லை. எனவே பாமகவின் 18 எம்எல்ஏக்கள், கம்யூனிஸ்டுகளின் 15 எம்எல்ஏக்கள் ஆதரவு திமுகவுக்கு இருப்பதால், காங்கிரசின் 35 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையில்லை என்று திமுக கருதுகிறதாம்.
எனவே, மதுரையில் நடைபெறும் கண்டனக் கூட்டத்தின் போது மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகுவதற்கான அறிவிப்பு வெளியாவது உறுதி என மதுரை திமுக வட்டாரம் கூறுகிறது.

நன்றி-மாலைச்சுடர்(23-10-2009)
>

மத்திய தொலைத்தொடர்பு துறை அலுவலகங்களில் திடீர் ரைடு-பின்னணி என்ன?

மத்திய தொலைத் தொடர்புத் துறை அலுவலகங்களில் திடீரென்று மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருப்பது தலைநகர வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டின் உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக எழுந்த கடுமையான குற்றச்சாட்டின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரம் தெரிவித்தாலும், இதற்கு அரசியல் பின்னணி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணிக் கட்சியான திமுகவின் தலைமை காங்கிரஸ் கட்சியையும், பிரதமரையும் வற்புறுத்தி தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சராக மீண்டும் ஆ. ராசாவே நியமிக்க வைத்தது முதலே, இதுபோல ஒரு விசாரணை வளையத்தில் அமைச்சர் ஆ. ராசா சிக்க வைக்கப்படுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆ. ராசாவுக்கு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தரப்பட வேண்டும் என்பதில் திமுக தலைமை பிடிவாதம் பிடித்தது பிரதமர் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த எல்லா சம்பவங்களிலும் திமுக எடுத்த நிலைப்பாட்டைக் காங்கிரஸ் தலைமை விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், குறிப்பாக, இலங்கைத் தமிழர் பிரச்னையிலும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையிலும் திமுக அரசின் செயல்பாடுகளில் காங்கிரஸ் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும் தெரிகிறது.

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மணிசங்கர் அய்யர் போன்றவர்கள் திமுகவினரால் வேண்டுமென்றே தோற்கடிக்கப்பட்டனர் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் வெற்றியை அவர்தான் உறுதி செய்து கொள்ள வேண்டி வந்ததாகவும், இந்த விஷயத்தில் திமுக அவருக்கு எதிராக வேலை செய்ததாகவும்கூட வதந்திகள் உண்டு. அதேபோல, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.வி. தங்கபாலுவும் திமுகவினரின் முழுமையான ஒத்துழைப்புத் தரப்படாமல் தான் தோல்வி அடைந்ததாக மேலிடத்துக்குக் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் செயல்பாடுகள் பற்றி இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியிடம் விமர்சித்ததாகவும், அவரும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம் போலத் தமிழகத்தில் மீண்டும் காங்கிரûஸ வலுப்படுத்துவதற்கு உறுதி எடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இதுபோல அதிரடிச் சோதனைகளும், அதன் மூலம் திமுகவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதும் காங்கிரஸ் மேலிடத்தின் திட்டம் என்று தில்லி பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இந்த சோதனைகளைக் காரணம் காட்டி ஆ. ராசாவின் அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் அல்லது இலாகா மாற்றப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.

தில்லியில் உள்ள ஒரு மூத்த பத்திரிகையாளர் வேறு விதமாக இந்த சோதனையை விளக்க முற்பட்டார். ""நீங்கள் ஏன் காங்கிரஸ் தலைமையைக் குற்றம் சாட்டுகிறீர்கள்? ஒரு வேளை முதல்வர் கருணாநிதிக்கு அமைச்சர் ஆ. ராசாவின்மீது அதிருப்தி ஏற்பட்டு, அவரே இந்த சோதனைக்கு ஏன் அனுமதி அளித்திருக்கக் கூடாது? முதல்வர் கருணாநிதியைக் கலந்தாலோசிக்காமல் சோனியா காந்தியோ, பிரதமர் மன்மோகன் சிங்கோ ஒரு திமுக அமைச்சரின் துறையில் மத்தியப் புலனாய்வுத் துறை சோதனை நடத்த அனுமதித்திருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை!'' என்கிறார் அவர்.

தில்லி அரசியல் வட்டாரங்களில் பரவலாகக் காணப்படும் கருத்து என்னவென்றால், திமுகவுடனான காங்கிரஸின் உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்பதுதான். மாநிலத்தில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளக் காங்கிரஸின் தயவு தேவைப்படுவதால், திமுக தலைமை, அதாவது முதல்வர் கருணாநிதி, காங்கிரஸின் நிபந்தனைகளுக்குப் பணிந்து கொடுப்பாரே தவிர கூட்டணியை விட்டு வெளியேற மாட்டார் என்பதால், இதுபோன்ற புலனாய்வுத் துறை சோதனைகள் திமுக தலைமையை பயமுறுத்தும் முயற்சியாக இருக்கக் கூடும் என்றுதான் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

நன்றி: தினமணி 
>

Tuesday, October 20, 2009

தமிழக எம்.பிக்கள் பயணமும்-இலங்கையின் அழுத்தமும்

திமுக , காங், விடுதலைச்சிறுத்தைகள் எம் பி க்கள் குழு இலங்கை சென்று வந்த பயணம் பற்றி பலவாறு செய்திகள் வருகின்றன.
ஆளும் கட்சியை சேர்ந்த இவர்களும், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பலரும் மாறி மாறி
கருத்துரைப்பது பட்டிமன்றமே தோற்றுவிடும் அளவிற்கு சரி , தவறு என்று பேசிக்கொண்டே இருக்கின்றனர். இந்த பயணத்தினால் என்ன நன்மை?
இலங்கை அரசாங்கம் திருந்துமா? இலங்கை வாழ தமிழ்ருக்கு உடனடி மறுவாழ்வு கிட்டுமா?  முள்வேலி முகாமிற்குள் வுள்ள எம் தமிழர் சொந்தவூருக்கு செல்ல அனுமதி கிட்டுமா? என்பது தெரியவில்லை.

ஆனால் இன்று இலங்கைக்கான ஊடகத்துரை அமைச்சர் லக்ஷ்மன் யப்பா
'அகதி மக்களை பார்வையிட வந்த சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பலவகையான அழுத்தங்களை இலங்கைக்கு கொடுத்தனர், அனால் இந்தியாவிலிருந்து வந்த எம் பி க்கள் குழுவினர் மட்டுமே எமது நாட்டின் நிலைமைகளை புரிந்துகொண்டு இலங்கைக்கான உதவிகளை மேலும் அதிகரிக்க வழிவகுத்தனர்.,
மேலும், இந்திய எம் பி க்களின் இலங்கை விஜயம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது அவர்களுக்குதமிழ்கத்தில் பல்வேறு அழுத்தங்கள் காணப்பட்டபோதும் மிகவும் யதார்த்தமாக நடந்துகொண்டனர்' என்றார்  (வீரகேசரி-21-10-2009).

ஆக, இப்போது சொல்லுங்கள் இந்த பயணம் சிங்களவனுக்கு பயனுள்ளதாக
அமைந்துவிட்டதாக அமைச்சரே சொல்கிறார்.
இவர்கள் போகாமலேயே இங்கிருந்து அழுத்தம் கொடுத்திருக்கலாமோ?

மொத்தத்தில் புண்பட்ட இலங்கைத்தமிழ்ர்களை மேலும் மேலும் புண்பட வைக்காதிர்கள். நமக்குள் ஒற்றுமை இல்லாதது மத்திய அரசுக்கும்., இலங்கை அரசுக்கும் கொண்டாட்டமாகிப் போய்விடுகிறது, இதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது.
>

9 வது உலகத்தமிழ் மாநாடா?-உலகத் தமிழ் செம்மொழி மாநாடா?

இன்று (20-10-2009 ) பத்திரிகையில் வந்த செய்தியை அப்படியே கிழே தருகிறேன்:-

உலகத் தமிழராய்ச்சி சங்கத் தலைவர் நொபுரு கரஷிமா ஆட்சேபித்ததால், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டுக்கு பதிலாக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என நடத்த, தமிழக அரசு முடிவு செய் துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மாநாடுக்குச் சென்ற முதல்வர் கருணாநிதி, கூட்டம் துவங்கியதும், "உலகத் தமிழ் மாநாடு கோவையில் ஜனவரி மாதம் நடத்தப் படும்' என அறிவித்தார். உலகத் தமிழ் மாநாடு நடத்த, உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற வேண்டும். அந்த சங்கத்தின் ஒப்புதல் பெறாமலேயே மாநாடு தேதி அறிவிக்கப்பட்டது.


இதையடுத்து, உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் துணைத் தலைவர் குழந்தைசாமி உள்ளிட்ட சில உறுப்பினர்களை முதல்வர் கருணாநிதி அழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் ஒப்புதலை பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஓராண்டு அவகாசம் அளிக்க வேண்டுமென, ஜப்பானில் உள்ள பேராசிரியரான சங்கத் தலைவர் தலைவர் நொபுரு கரஷிமா மற்றும் சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால், ஜூன் மாதம் அல்லது ஜூலை முதல் வாரத்தில் நடத்தலாமென, முதல்வர் கருணாநிதி மற்றும் சென்னையில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவன உறுப்பினர்கள் முடிவு செய்தனர். ஆனாலும், ஜப்பானில் உள்ள சங்கத் தலைவர் இதற்கு சம்மதிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 2010 டிசம்பர் அல்லது 2011 ஜனவரியில் தான் நடத்த வேண்டுமென்பதில் அவர் உறுதியாக இருந்துள்ளார். ஆனால், தமிழக சட்டசபைக்கு 2011 மே மாதத்துக்குள் தேர்தல் நடக்கும் என்பதால், அதையொட்டி மாநாடு நடத்த தமிழக அரசு விரும்பவில்லை. மேலும், உலகத் தமிழராய்ச்சி சங்கத் தின் சில உறுப்பினர்களும் ஜூன் மாதம் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


இப்பிரச்னை காரணமாகவே, காஞ்சிபுரத்தில் நடந்த அண்ணா  நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர், தமிழ் செம்மொழியானதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநாடு நடத்தப்படுமென சூசகமாக தெரிவித்தார். இதற்கிடையே, வெளிநாடுகளில் உள்ள உலகத் தமிழராய்ச்சி சங்கத்தின் உறுப்பினர்களுடன் தொடர்ந்துபேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சிலர் சம்மதித்த போதிலும், ஜூன் அல்லது ஜூலையில் மாநாட்டை  நடத்த சிலர் சம்மதிக்கவில்லை. எனவே, சர்ச்சையுடன் மாநாட்டை நடத்த முதல்வர் விரும்பவில்லை. இதன் காரணமாக, நாமே செம்மொழி மாநாடாக நடத்திக் கொள்ளலாம் என்ற கருத்தை முதல்வர் தெரிவித்துள்ளார். இதை, இங்குள்ள மற்ற உறுப்பினர்கள் ஏற்றனர். இதன்பின், தீபாவளிக்கு முதல் நாளன்று, சென்னையில் உள்ள செம்மொழி ஆராய்ச்சி மையத்தில் நடந்த கூட்டத்தில், ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு என்பதற்கு பதிலாக, "உலகத் தமிழ் செம்மொழி மாநாடு' என்ற பெயரில் மாநாடு நடத்த முடிவு செய்யப் பட்டது. கோவையிலேயே இந்த மாநாட்டை ஜூலையில் நடத்த தேதியும் இறுதி செய்யப்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏன் இவ்வளவு அவசரம்? இப்படி பெயர் மாற்றி உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டால்
இனி  வரும் காலங்களில் 11., 12., வது நடத்தப்படும்போது., உலகத் தமிழ் செம்மொழி மாநாடு-2 என பெயர் வைப்பார்களா? ., அப்படி வைக்கப்படும் பொது ஏற்கனவே நடத்தப்பட்ட மாநாடுகள் பற்றி குழப்பம்  ஏற்படும்  அல்லவா?
சுய விளம்பரம் தேடிக்கொள்ள ஆளுவோர்க்கு தமிழ் தான் கிடைத்ததா?
ஆட்சியில் செய்த திட்டங்கள், பலன்கள், சாதனைகள் என்று இருப்பதை சொல்லி மக்களை சந்திக்காமல் , அவற்றோடு இந்த மாநாட்டினையும் சேர்ப்பதர்க்கா? என மக்கள் சிந்திக்கமாட்டார்களா?
எல்லாம் கலைஞரவர்களுக்கே வெளிச்சம்.
>

நாடுகடந்த தமிழ் ஈழத்துக்கு 5 நாடுகள் அனுமதி : இலங்கை அதிர்ச்சி

இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த 4-வது ஈழப்போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர். போர் முடிந்த பிறகு சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்களை அகதிகளாக முகாம்களுக்குள் சிங்கள அரசு அடைத்து வைத்துள்ளது.


விடுதலைப்புலிகளை வீழ்த்திவிட்ட போதிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களின் “ஈழம்” கனவை சிங்கள அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தனி ஈழம் நாட்டை உருவாக்கியே தீருவது என்ற முயற்சியில் ஈழத்தமிழர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்டமாக நாடு கடந்த தமிழ் ஈழத்தை உருவாக்கி உள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் ஈழத்தை சேர்ந்த 59 தமிழர்கள் முன்நின்று நாடு கடந்த தமிழ் ஈழத்தின் நிர்வாகத்தை நடத்தி வருகிறார்கள்.

நாடு கடந்த தமிழ் ஈழத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய 5 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளது. இது இலங்கையின் சிங்கள அரசுக்கு கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசை நடத்தி வரும் 59 தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்தது. ஆனால் ஈழத் தமிழர்கள் மீது நடவடிக்கை எடுக்க 5 நாடுகளும் மறுத்துவிட்டன
 
மாலை மலர் (20-10-2009) செய்தி
வரும் நாட்களில் அனைத்து நாடுகளும் ஆதரிக்கும் என்று எதிர்பார்ப்போமாக.
>

Saturday, October 17, 2009

தமிழகத்தின் "ஹீரோ" ஆகிறார் பிரபாகரன்


தமிழகத்தின் 'ஹீரோ' ஆகிறார் பிரபாகரன் , எப்படி இருக்கும் பின் விளைவு ?
-தினமலர் செய்தி (18-10-2009)


புலிகள் தலைவர் பிரபாகரனை தங்கள் ஹீரோ வாக பாவிக்கும் மனநிலை பலரிடத்தில் பரவி வருவது தமிழகத்தின் ஆரோக்க்யதுக்கு ஏற்றதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்புக்கு பின் இலங்கையில் தமிழன் கனவு தகர்ந்துபோனது. அவர் இருந்தவரை இலங்கை தமிழர்களின் ஒட்டுமொத்த குரலுக்கு எதிரொலியாக இருந்து செயல்பட்டதால் அவருக்கு அங்குள்ள தமிழ்ர்களின் மனதில் தனி இடமுண்டு.

தமிழர்களுக்கு வாழ்க்கையை செலவு செய்ததால் உலக தமிழர்களிடத்திலும்
பிரபாகரனுக்கு என்று ஒரு அந்தஸ்து இருந்து கொண்டு தான் வருகிறது. தமிழகத்தில் இருந்த பல்வேறு கெடுபிடிகளால் அவரது பெயரை உச்சரிப்பது
கூட ரகசியமாகவே இருந்தது.

அவரது இறப்புக்குப்பின் பிரபாகரன் ஆதரவு கரம் வெளிப்படையாகவே முளைக்க துவங்கி உள்ளன. நடிகர்கள், தெய்வங்கள், அரசியல் தலைவர்கள் படங்கள் போல கையில் பச்சை குத்திக்கொள்வது, சட்டையில் லோகோ அச்சடிதுக்கொள்வது, வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்டுவது என பிரபாகரன் மோகம் அதிகமாகிவிட்டது "சீசன்' போல அல்லாமல் ரியல் ஹீரோ ஆக மாறி வரும் பற்றுப்படலம் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்துமோ என உளவுப்பிரிவினருக்கே தற்ப்போது உதறல் ஏற்ப்பட துவங்கி உள்ளது.

பிரபாகரன் உயிரோடு இருந்தவரை அவருக்கு இந்த அளவிற்கு கரிசனம் காட்டப்பட்டதா? என்பது கூட சந்தேகமே. தமிழருக்காக அன்பு மனைவி,
மகன், மகளை இழந்து இறுதியில் தன்னையே பலி கொடுத்த அவரது தியாகம்
தமிழக மக்களிடையே அவருக்கு "ஹீரோ" அந்தஸ்தை பெற்று தந்துள்ளது. என்றாலும் இதன் பின் விளைவு எப்படி இருக்குமோ? என்ற கோணத்தில் ஆட்சியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளது என்பது மட்டும் உண்மை.

( தினமலர் செய்தி -18 - 10 - 2009)

இவ்வளவு எழுதிவிட்டு எதனால் கலக்கம் அடைகிறார்கள் என்று குறிப்பிடவில்லை. தமிழ் உணர்வு இயற்கையாகவே தமிழரிடத்தில் இருக்கும் வரை , இந்த வெளிப்பாடு எப்போதும் இருக்கும்


>

Friday, October 16, 2009

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்


>

Wednesday, October 14, 2009

பதிவெழுதிப்பார் !













பதிவெழுதிப்பார்!
உலகில் விமர்சிக்க ஆயிரம் நிகழ்வுகள்
பின்னூட்டம் படித்தபின்னே
முன் யோசிக்க மறந்தது புரியும்



பதிவெழுதிப்பார்
புகழ்ந்து பேசுவதும்
புழுதிவாரி இறைப்பதும்
சுலபமாய் புரிந்துபோகும்



பதிவெழுதிப்பார்
விரிவாய் எழுதி ,வோட்டு பெற்ற பின்னும்
அதிகம் வேணும் என
ஆசை கொண்டு ஏங்கும்


பதிவெழுதிப்பார்
புதிய படைப்பு
புதிய யோசனை
புதுமை நடை
சிந்திதித்து சிந்தித்து
மண்டை வறண்டுபோகக் காண்பாய்



பதிவெழுதிப்பார்
பல நாட்டின் பதிவர்கள்
பைந்தமிழ் அன்பர்கள்
உன் பக்கம் வந்துபோவதும்
உன் நண்பராய் மாறிப்போவதும்
உன் பதிவை வைத்துதான்



ஆக,
பிறர் நேரம் வீணாக்காத
நல்ல பதிவு
நன்மை பதிவு
நாள் தோறும் தரவே
பதிவெழுதிப்பார் - அது வொரு அனுபவம்
>

Saturday, October 10, 2009

புகைப்படங்களும், நினைவுகளும்











நினைத்துப்பார்க்கிறேன்
கல்லூரி
மற்றும் கல்லூரி விடுதி நாட்களை
படிக்க மட்டுமின்றி , பழக எத்தனை எத்தனை நண்பர்கள்
சினிமா , விழாக்கள், அரட்டை, டியுஷன் என்று
கலகலப்பாய் கவலையின்றி சென்ற நாட்கள் அவை.
திரும்ப வராதா என்று ஏக்கம் தரும் இன்றும்.


நான்கு வருடம் போனதே தெரியவில்லை,அன்றாடம் நண்பர்களுடன் பேசிக்கொண்டே, ஏதாவது விளையாடிகொண்டே., பரீட்சை நேரங்களில் படித்துக்கொண்டே
ஒவ்வொரு வருடமும் முடிந்து ., கல்லூரி மறுபடி திறக்கும் வரை என்று போனது.



படிப்பு முடிந்து ., பிரியும் நேரம் வந்தபோது
எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆட்டோகிராப் வாங்கி (அதில் அறிவுரை வேறு) "பசுமை நிறைந்த நினைவுகளே , பாடித்திரிந்த பறவைகளே" என்று கண்ணாதாசனின் பாடல் கேட்டு ,பிரிந்து, வீடு வந்து சேர்ந்து., பட்டம் வாங்கி , பயணம் சென்று , பணியில் சேர்ந்து , மனைவி , மக்கள் என்று குடும்பமாகி வாழ்க்கை வேறு திசையில் பிள்ளைகளுக்கென்று சென்று கொண்டு இருக்கும் இந்த நிலையில்,அன்று பழகிய நண்பர்கள், எங்கே ? எப்படியோ ? என்று எண்ணாத நாளில்லை.

இன்று கல்லூரியில் படிக்கும் இளையர்கள் .,ஒரு வகையில் கொடுத்து வைத்தவர்கள் படிப்பு முடிந்து பிரியும் பொது எல்லோரது கைத்தொலைபேசி , மின் அஞ்சல் முகவரி, facebook, tweeter என்றெல்லாம் நட்பை

தோடர்கின்றனர் என்பது சந்தோசம் தான்.

அப்போது எங்களுக்கு அந்த வசதிகளில்லை என்று இன்று எண்ணும்போது வருத்தம் தான் மிஞ்சுகிறது.
அன்றைக்கு எங்களுக்கு வூர் முகவரி மட்டும் தான், எல்லோரது ஆட்டோகிராப் கிடைக்கும் ., அதுவும் தொலைந்து
போனால் தொடர்பு துண்டிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.
என்றாவது எப்போதாவது , நேரடியாக சந்தித்தால் தான் உண்டு.

அப்படி விட்டுப்போன நண்பர்களை தொடர்புகொண்டு அளவளாவ மனது
ஏங்கும் நேரமெல்லாம்., பழைய குழு புகைப்படங்களை பார்த்து ஆறுதலடைகிறேன்.


(அது சரி எல்லோரும் செய்றது தானே? இது என்ன மொக்கை பதிவு தானே என்று
நீங்கள் மனசுக்குள் சொல்வது புரியுது ., மேட்டர் கிடைக்கலை , அதான் இதையும்
எழுதிவிடுவோமேன்னு .. ஹி..ஹி )


>

Saturday, October 3, 2009

கவியரசு கண்ணதாசன்
















என் நினைவுகளில்

கவியரசு கண்ணதாசன்

திருச்சி - 1980

(மாதம் நினைவிலில்லை)
எங்கள் கல்லூரி விடுதி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று எங்கள் எல்லோரையும் அவரது பேச்சு அசையவிடாமல் ரசிக்கவைத்தது. மாலை சுமார் எட்டு மணி அளவில் பேசத்தொடங்கினார் 2 மணி நேரம் போனதே தெரியவில்லை , நகைச்சுவை கலந்து அனைவரயும் கலகலப்பாக்கி பேசினார்., அப்போது தான் எனக்கு தெரிந்தது அவர் நல்ல கவி மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட என்று.
அவர் பேச்சில்,
திருச்சியில் தான் அவருக்கு கவியரசு பட்டம் கொடுத்தார்களாம் அதை
குறிப்பிட்டு ,எனக்கு 'கவியரசு' பட்டம் கொடுத்தது இங்கே தான் ., அதை தான் இன்று மாற்றி 'அரசுகவி' ஆக்கி இருக்கின்றார்கள் (எம் ஜி ஆர் ஆட்சியில் கண்ணதாசனுக்கு அரசுகவி என்ற மரியாதை செய்திருந்தார்கள்). என்று கூறினார்.

சில வாக்கியங்களை சுத்த தமிழில்
எழுதும் பொது அர்த்தம் மாறி விடும் என்று சில வார்த்தைகளையும் குறிப்பிட்டார்
கவர்னர் ஷா வே வருக - ஆளுநர் சா வே வருக (அப்போதைய தமிழக கவர்னர் திரு கே கே ஷா)
ரப்பர் தொழிர்ச்சாலை-இரப்பர் தொழிற்ச்சாலை யாகவும்
மற்றும் குஸ் வந்த சிங் என்ற பெயர்.

அது போலவே நம் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலேயர்கள் பேசும் பொது மாறி ஒலிப்பதையும் குறிப்பிட்டு பேசினார் , நேசமணிபொன்னையா
என்ற பெயரை நாசமா நி போனியா என்றெல்லாம் மாறி அழைப்பதை சொன்னார்.

பின்னர் அவர் எழுதிய பாடல்கள் பலவற்றை குறிப்பிட்டு பேசினார் அவர் பலே பாண்டியா படத்தில் எழுதிய , 'அத்திக்காய் காய் காய்' என்ற பாடலில் காய்கறிகள் பெயர்கள் வரும் வரிசையாக ., கஷ்டப்பட்டு எழுதிய அந்தப்பாடலை 'கொத்தவால் சாவடி பாட்டு' என்று விமர்சனம் செய்ததை குறிப்பிட்டார்., 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலின் கடைசிவரி யான 'அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை ., என்று தான் கவிதை எழுதவும் பெண் தான் காரணம் என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.

சில பாடல்களை அவரே அழகாக பாடியே காட்டினார்.
அன்று அவரது பேச்சில் இலக்கியம்., கவிதை ., சினிமா , என்று பல விஷயங்கள்
கலந்து இருந்தது.
அதற்கு அடுத்த வருடம் 1981இல் மறைந்தார். அவரின் இழப்பு
தமிழ்த்தாய்க்கு பெரிய இழப்பு என்றால் அது மிகையில்லை.

இரத்தத்திலகம் படத்தில் அவரே நடித்து பாடிய பாடலில்
"நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற வரிகள் முன்பே யோசித்து எழுதிய வரிகள் போலவே எனக்கு தோன்றுகிறது.

இன்றும் அவரின் அனைத்து பாடல்களுமே சாமான்யனும் புரிந்துகொள்ளும் அர்த்தங்களுடன் ., தமிழ் பேசும் நல்லுலகமெங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .
>

Thursday, October 1, 2009

அது உண்மையில் கனாக்காலம் தான்







அதிகாலை நேரம்
ஒட்டு வீட்டு முற்றம்
வோரமாய் தூங்கும் என்னை
பள்ளி செல்ல எழுப்பும் அம்மா
கட்டி வெல்ல தேனிர்
சுடச்சுட பருகி
வேகமாய் ஓடுவேன்
அருகில் உள்ள குளக்கரைக்கு
ஆனந்த குளியல் போட...
பசங்களுடன் கும்மாள குளி(குதி)யல்
பெரியவர்களின் அதட்டலில்
கொஞ்சம் குறைத்துக்கொள்வோம்
கரணம் அடிப்பதை.
வீடு வந்து
தலைநிறைய எண்ணெய் தேய்த்து
அது வழிய வழிய வாரிவிடும் அம்மா
காலை உணவு ,
டிபன் பாக்ஸ், புத்தக பையுடன்
அம்மாவின் முத்தம் பெற்று
அடுத்தவீட்டு பையனுடன்
ஆற்றோரமாய் நடக்க
அரை மைல் தூரத்தில்
அடுத்த வூர் பள்ளிக்கூடம்.
ஒன்றுகூடி இறைவணக்கம்
பிரிந்து சென்று
வகுப்பறையில்
முன் பெஞ்சு பையனுடன்
எதாவது வம்பு
பிரம்புடன் வாத்தியார்
கல்வியோடு போதனைகள்
மாலையில் வீடு
தெரு பசங்கள் எல்லாம்சேர்ந்து
பம்பரம் விடுவோம் வெயில்நாளில்
பலிங்கி அடிப்போம் மழை நாளில்
பட்டம் விடுவோம் ஓய்வுநாளில்
கிட்டிப்பில் விளையாடாத நாளே இல்லை
தெரு தான் எங்கள் நண்பன்
ஒரே ஆரவார சத்தம்
ஓய்வதற்கு மாலை மணி எட்டு ஆகும்.
ஆறு வற்றும் நாட்களிலோ
காலில் மணல் பதிய பதிய
கபடி விளையாட்டு
வேர்வை கொட்டி வீடு திரும்ப
இருட்டிவிடும் -பாட்டு விழும் அம்மாவிடம்.
பரீட்சை நேரம் -படிப்பதுண்டு
மீண்டும் மறுநாள்...
அதே
குளத்திலே குளி(குதி)யல்...
அப்பப்பா !
எண்ணிப்பார்க்கையில்
களைப்பில்லா ,கவலையில்லா நேரம் அது
அகவை நாற்பதில் அசைபோட
அது ஒரு கனாக் காலம் தான்.

இன்றோ
அதே மாலை வேலை
விளையாடும் பசங்களை காணோம்
வெறிச்சோடி கிடக்கிறது தெரு
டிவி சத்தம் தான் வீடுகள்தோறும்
வீட்டோடு முடங்கிப்போய்
இளந்தளிர்கள்.

ஆனாலும்...
சாதனைகளுக்கும் குறைவில்லை
சிகரம் தொட தயங்குவதில்லை
சச்சின்
A.R. ரஹ்மான்
டோனி
சனியா மிர்சா
விசுவநாதன் ஆனந்த்
எல்லோரும்
இளையர்கள்.
இன்னும் வருவார்கள்...
இன்றைய இளையர்கள் வழியும் தனி வழி தான்

>