Monday, October 26, 2009

என் டைரியும் , யாரோ எழுதிய கவிதைகளும்

அன்புள்ள வலை அன்பர்களே!
இன்று எனக்கு விடுமுறை நாள்., எனது அறையில் உட்கார்ந்து என்
பழைய டைரியில் எனக்கு பிடித்த 90  களில் வெளிவந்த கவிதைகளை புரட்டிப்பார்த்தேன் ,இவை உங்களுக்கும் பிடிக்கும். அவற்றில் சில உங்களுக்காக:
1.

நேற்றைய வெற்றியின்
தழும்புகளைவிட இன்றைய போராட்டத்தின்
வியர்வைத்துளிகள்
நெற்றிக்கு கூடுதல் அலங்காரம்

வெல்ல வேண்டும் எப்போதும்
இந்த நல்ல எண்ணம் வேண்டும்
வெறியாக வேண்டாம் நெஞ்சில்
பொறியாக நிற்கட்டும்

உறைக்குள் உட்கார்ந்திருக்கும்  வரை
வாளுக்கு வருத்தமில்லை
உருவிய பின்னாலோ
தப்புவது நிச்சயமில்லை
வெட்டும்போதெல்லாம்
வாளின் மேனியும் காயம்பட்டே ஆகவேண்டியது
கட்டாயம் போலும்
கட்டுப்போட வழியின்றி
வழிகிறது இரத்தம்.
-பத்மாவதி தாயுமானவர்


2.உனக்கானசெய்தி ஒன்று

அடுக்கி விரித்து வைக்கப்பட்டிருக்கும்
அச்சடிக்கப்பட்ட அட்டைகளை கவனிக்கிறேன்
ஏதோ ஒன்று ஈர்க்க
எடுத்துப் பார்க்கும்
இரண்டாம் கணத்திலேயே சோர்வுறுகிறேன்

இன்னொன்று, வேறொன்று ,இன்னொன்று
என்னிடத்திருக்கும் உனக்கான செய்தியை
எதுவுமே முழுமையாய் வெளிப்படுத்தியிருக்கவில்லை

எப்படி முடியும்?
அவையெல்லாம் யார் யாரோ யார் யாருக்கோ
எது எதற்காகவோ உருவாக்கப்பட்டவை.

உனக்கான என் செய்தியை நானே
எழுதிவிடுவது என்று தீர்மானிக்கிறேன்
யோசிக்கிறேன்,யோசிக்கிறேன், போராடுகிறேன்
மொழியின் ஏழ்மையில் அயர்வுற்று வீழ்கிறேன்
எழுதப்படாத வெள்ளைத்தாளை உற்று நோக்குகிறேன்

நஸ்ரின்...
அதை உன்னால் வாசிக்கமுடியும்
இத்துடன் இணைத்துள்ளேன்.


3. வாய்ப்பு

ஒலி கூட்டி உச்சரிக்கையில்
கவனிக்காது நானிருந்தால் முகத்தில் அடிக்கும்
முறைத்தால்
சிறு இதழ் கொண்டு முத்தமிடும்

முடி பற்றி இழுத்து வீடெங்கும்
ஒரு குதிரைக்காரனைப்போல நடக்கும்
மறுத்துப்படுத்தால்
தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் ஊற்றும்

தெருவில் நடக்கிறேன் என
அடம் பிடிக்கும்
இறக்கி விட்டால் மண் கிளறும்.

அவளை நெருங்குகையில்
இடையில் வந்து படுத்து
உரத்துச் சிரிக்கும்

இப்படியாய்
எல்லோர்ருக்கும் போல
எனக்கும் வாய்த்திருக்கிறது
மகளின் குறும்புகள்

அனால், எவேருக்கேனும் நேருமோ
மழலையின் மோதிரத்தை
அடகுவைக்கும் வாழ்க்கை

-இரா.பச்சியப்பன்

4.
சற்று முன் அவள் நடந்துபோனாள்
தடயம் ஏதுமின்றி
அமைதியாய் கிடக்கிறது வீதி , அனால்
அதிவேக ரயிலொன்று
கடந்துபோன தண்டவாளம் போல
ஏன் இன்னும் அதிர்கிறது
என் இதயம்
-------------.
5. நினைக்கிறேன்.



மறக்க நினைக்கிறேன் ..
கள்ளிப்பாலில் மீசையும்
கரிக்கட்டையில் கிருதாவும் வரைந்து
சிரட்டையை மைக்காக தொங்கவிட்டு
வசனம் பேசி நாடகம் நடித்ததும்

களிமண் எடுத்து
குழல் ரேடியோ-ரிகார்ட்
செய்து
நூலை ஒயராக கட்டி
மரக்கிளை யிலிருந்து பாடியதும்

கடும் மழையிலும்
முறத்தை தலைக்கு வைத்துக்கொண்டு
பெட்டிக்ககடையில்
பட்டாணி வாங்கி கோறித்ததும்

மாலை நேரம்
பக்கத்து வீட்டு நண்பன்
படிக்க அழைத்து
நடுவிலிருக்கும் சிம்னி விளக்கில்
தாள் சுருட்டி புகை விட்டதும்

குளத்தின் மறுகரைக்குப்
புன்னைக்கோட்டை ஏறிந்து
நீச்சலடித்து எடுத்து வரும் போட்டியும்

மறக்க நினைக்கிறேன், முடியவில்லை.
>

0 comments:

Post a Comment