Wednesday, October 28, 2009

முல்லைப்பெரியாறு புதிய அணை-கண்டன கூட்டமும் ஒத்திவைப்பு


சென்னை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, முதல்வர் கருணாநிதி தலைமையில், வரும் 1ம் தேதி மதுரையில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம், ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் ஆய்வுக்கு அனுமதி அளித்த மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து, மதுரையில், வரும் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாகவும், அதில் முதல்வர் கலந்து கொள்வார் எனவும், தி.மு.க., அறிவித்தது. பின்னர், அந்தக் கூட்டம், கேரளா அரசைக் கண்டித்து என மாற்றப்பட்டது. தற்போது, கூட்டமே ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.இது தொடர்பாக, தி.மு.க., தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு, தமிழகம் காட்டும் எதிர்ப்பின் அடையாளமாக, வரும் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில், முதல்வர் கருணாநிதி தலைமையில் பொதுக்கூட்டம் நடத்துவதென அறிவிக்கப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில், "தற்போதுள்ள அணை உறுதியாக இருக்கிறது; புதிய அணை கட்டத் தேவையில்லை' என, தமிழக அரசு வாதாடி வருகிறது.மத்திய அரசின் வக்கீலும் இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்ள இருக்கிறார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது எனக் கூறியிருப்பதையே தற்போதும் வலியுறுத்துவதாகக் கூறியுள்ளார். இவ்வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதுரையில் வரும் 1ம் தேதி நடத்துவதாகத் திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தை, ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-இன்றைய செய்தி (தின மலர்)
 எனது முந்தைய பதிவில் இந்த கண்டன கூட்டம் பற்றி குறிப்பிடிருந்தேன், இப்போது அந்த கூட்டத்தையே ஒத்திவைத்து  விட்டார்கள்.
'அரசியல்னா இதெல்லாம் சகஜம்க்ரிங்களா?' அதுவும் சரிதாங்க
என்னா நழுவல்.,
>

0 comments:

Post a Comment